வரும் 26-ம் தேதி நிகழ உள்ள அபூர்வ சூரிய கிரகணத்தை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும் என்றும் மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரணகன காட்சியை காணலாம் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது.
சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு மறைத்து விளிம்பில் வளையம் போல ஒளி தெரிகிறபோது, அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வ நிகழ்வு ஆகும். இந்த வளைய சூரிய கிரகணம், வரும் 26-ம் தேதி நிகழ்கிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கர்நாடக மாநிலத்தின் தென்பகுதி, கேரளாவின் வடபகுதியிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில்தான், அதிக அளவில் இந்த அபூர்வ சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். 26-ம் தேதி அன்று காலை 8 மணி முதல் 11.16 மணி வரை இதை பொதுமக்கள் பார்க்கலாம்.குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க தமிழகத்தில் 11 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களிலும், பகுதியாக தெரியும் சென்னையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது என்று சொல்வது தவறு. கிரகணத்தின்போது வெளியே செல்லலாம், சாப்பிடலாம், கர்ப்பிணி பெண்களும் இயல்பாக இருக்கலாம்.
இதற்கு அடுத்து 2020-ம் ஆண்டு அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும், அதற்கு அடுத்தபடியாக 2031-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியிலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்” என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.